ETV Bharat / state

ராஜேந்திர சோழனுக்கு சிலை..படிக்க கோச்சிங் சென்டர் - அரியலூரில் பாஜக வேட்பாளரின் வாக்குறுதிகள் என்ன? - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 7:52 AM IST

CHIDAMBARAM LOK SABHA CONSTITUENCY: சோழ மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைப்பதாகவும், சட்டமன்றம் தோறும் நீட் கோச்சிங் சென்டர் அமைப்பதாகவும் பல்வேறு உறுதிமொழிகளை அளித்து சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி அரியலூரில் பிரச்சாரம் செய்தார்.

Chidambaram BJP Candidate Karthiyayini
பாஜக வேட்பாளர் பிரச்சாரம்

அரியலூரில் பாஜக வேட்பாளரில் வாக்குறுதிகள் என்ன

அரியலூர்: நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, அரியலூரில் உள்ள 18 வார்டுகளிலும் நேற்று (வியாழக்கிழமை) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதையடுத்து, அண்ணா சிலை அருகே தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "உங்களின் குரலாக, உங்கள் தேவைகளை நாடாளுமன்றத்தில் ஒலிப்பதற்காக இந்த தொகுதியில் இருந்து ஒருவரை இரண்டு முறை தேர்வு செய்துள்ளீர்கள். அவர் உங்களது தொகுதிக்கும் வரவில்லை. நாடாளுமன்ற அலுவலகத்தையும் திறக்கவில்லை. தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் உங்களின் குறைகள் மற்றும் தேவைகளைக் கண்டறிந்து, நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

ஆனால், நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர், அரியலூர் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார் என்று செய்தித்தாள்களில் படித்திருக்கிறீர்களா? தேர்தல் நேரத்தில் மட்டும் சமுதாயம் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு வருவார்கள். அவர்களிடம் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகள் பறந்து போய்விட்டன. ஆகவே, எதை நம்பி உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என நீங்கள் கேட்க வேண்டும்.

சுய லாபம் மற்றும் சுய வளர்ச்சிக்காக மட்டுமே மக்களை சந்திக்க வருகின்றனர். அவர்களால் யாரிடம் சென்று உங்கள் கோரிக்கைகளை எடுத்துக் கூறி நிறைவேற்ற முடியும். ஆனால், பாஜக வேட்பாளரான என்னைத் தேர்ந்தெடுத்தால், பிரதமரிடம் நேரடியாக உங்களது குறைகள் மற்றும் திட்டங்களை சமர்ப்பித்து, என்னால் உறுதியாக அவற்றை நிறைவேற்ற முடியும். அதனால், எனக்கு ஒரு வாய்ப்பை நீங்கள் தரவேண்டும்.

மேலும், இந்த தேர்தலில் உங்களுக்கு 500 ரூபாய் வேண்டுமா? அல்லது விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் வேண்டுமா? என்பதை நீங்கள்தான் சிந்திக்க வேண்டும். பிரதமரை மூன்றாவது முறையாக நீங்கள் தேர்ந்தெடுத்தால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் 12 ஆயிரமாக உயர்த்தப்படும்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தன்னை தேர்ந்தெடுத்தால், தொகுதி மக்களுக்கு நான் அளிக்கும் வாக்குறுதிகளாக நீட் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு, குரூப் 4 தேர்வு ஆகியவற்றிற்கு பயிற்சி பெறுவதற்காக மாணவர்கள் சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பெரும் நகரங்களுக்கு செல்ல வேண்டிய தேவைகளை தவிர்த்து, ஒவ்வொரு சட்டமன்றத்திலும் ஒரு கோச்சிங் சென்டர் (TNPSC, UPSC Coaching Center) அமைத்து தருவேன்.

சோழ மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சிலை எடுப்பேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தொழிற்சாலைகளை உருவாக்குவேன். அரியலூரில் 30 ஆண்டுகால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நவீன பேருந்து நிலையம் அமைத்து தருவேன். சுற்றுலா மேம்பாடு அடைய அனைத்து ஏற்பாடுகளையும் செய்வேன்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகளில், காலியாக உள்ள சுண்ணாம்பு சுரங்களில் இயற்கை காடுகள் அமைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்" உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்து, தன்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் ஐயப்பன், பாமக பொறுப்பாளர்கள் ரவி, திருமாவளவன், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: வரட்டி சாணத்தால் தாக்கும் விநோத திருவிழா.. ஆந்திராவில் உகாதியை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்! - Ugadi 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.